ஏ.ஆர்.ரகுமானின் திறமை லிடியனிடம் உண்டு –  ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்

ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் இந்தியன் பப்ளிக் ஸ்கூல் குழந்தைகளுக்கென கிட்ஸ் நியூஸ் மற்றும் அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி என்ற இரு பயிற்சிகளை அறிமுகம் செய்தள்ளது. இதனை உலக அளவில்  புகழ் பெற்ற  லிடியன் நாதஸ்வரம் துவங்கி வைத்து பள்ளி மாணவர்களுடன்  உரையாடிய பின்னர்  அவர்களின் கேள்விக்கு  பதில் அளித்தார்.  இந்நிகழ்ச்சியில்  லிடியனின் சகோதரி அமுர்த வர்ஷினி பாட்டு பாடி அசத்தினார்.

அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி என்ற சர்வதேச தரத்திலான புதிய முயற்சியை பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர் வடிவமைத்திருக்கிறார். இந்நிகழ்ச்சியில், நக்கீரன் கோபால் உள்ளிட்ட புகழ்பெற்ற  புகைப்பட கலைஞர்கள், ஓவியர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்,

நிகழ்ச்சியில் பேசிய நக்கீரன் கோபால்..  நான் ஒரு சாதாரண பள்ளி கல்லூரியில் படித்தேன். பின் பிழப்புக்காக சென்னை வந்தேன். கற்பனை பண்ணாத அளவிற்கு இப்பள்ளியின் சுற்றுப்புற சூழல் அழகாக  அமைந்திருப்பது  பாராட்டக்குறியது.  நான் பெரிய  பாக்கியமாக  நினைப்பது குட்டி புலி லிடியன் அருகில் இருப்பதுதான்.  ஏனென்றால் 12 வயதில் உலக சாதனையும் பாராட்டுகளையும் சேர்ப்பது சாதாரணம் அல்ல.  எதுவும்  நம்மால்  முடியும்  என்பதற்கு லிடியன் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார்.

இவர் பியானோ வாசிப்பதில் ஒரு ஸ்டைல் உள்ளது. ஆனால் இப்போது மிக சாதாரணமாக அமர்ந்திருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்தது லிடியனின் தந்தை. இவர்களுக்கு தமிழ் பெயர்களை வைத்திருப்பது. நானும் பிற்காலத்தில் இப்படிப்பட்ட பள்ளிக்கு வந்தேன் என்று பெருமைக்கூறி கொள்வேன்’ என்றார்.

லிடியனின் தந்தையும் இசையமைப்பாளருமான வர்ஷன் சதீஷ் பேசும்போது, ‘நான் இங்கு இருப்பது மிகவும்  மகிழ்ச்சி. எங்களை இங்கு அழைத்ததற்கு நி்ர்வாக இயக்குனர் டாக்டர் சிவகுமார் மற்றும் கிருத்திகா சிவகுமார் மற்றும் ஸ்ரீதர் அவர்களுக்கு நன்றி. பள்ளி பருவம் என்பது ஒரு அரிய வாய்ப்பு, அனைவரும் கூறும்படி லிடியன் உலக புகழ், பெருமைகளையும் பாராட்டுக்களையும் பெற்றாலும் என் மகனிற்கு  நான் ஒரு ரசிகன்.

லிடியன் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் பயிற்சி எடுக்கிறார்.  இந்த வயது மிகவும் அற்புதமான வயது. அதை டெக்னாலஜி எனும் செல்போன், யூடியூப், கேம்ஸ் ஆகியவற்றில் நேரத்தை செலவிடாமல் இருத்தல் நல்லது. என் மகனை நான் பள்ளிக்கு அனுப்பவில்லை, ஆனால் பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக வருவது சச்சின் டெண்டுல்கர் போன்றோரைத்தான் பார்த்துள்ளேன். இப்போது என் மகன் அப்படி செல்வது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்.

ஏ.பி.ஸ்ரீதர் பேசும்போது, ‘என் வாழ்வில் ஒரு சர்வதேச அளவிலான ஓவியக்கல்லூரி ஒன்று கட்ட வேண்டும் என்பது ஆசை. அதன் தொடக்கமாக இப்பள்ளியில் டிப்ஸ் கிட்ஸ் நியூஸ் மற்றும் அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி தொடங்கியுள்ளேன்.

லிடியனின் தந்தையை  பார்க்கும் போது என் தந்தை ஞாபகம் வருகிறது. என் தந்தையும் இதே போன்றுதான் உற்சாகப்படுத்தினார். உலகம் மறக்கமுடியாத இசையமைப்பளார்களில் ஒருவராக லிடியன் இருப்பார். 2002ல் இருந்து ஏ.ஆர்.ரகுமான் அவர்களை தெரியும். அவரிடம் உள்ள அதே அன்பு, பணிவு, அளவற்ற திறமை லிடியனிடம் உண்டு. மேலும் லிடியனின் பெற்றோர்களை பெருமைப்படுத்துவதில் மகிழ்ச்சிக்கொள்கிறேன். இப்பள்ளியின் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைவர் டாக்டர் சின்னுசாமி, நி்ர்வாக இயக்குனர் டாக்டர் சிவகுமார் மற்றும் கிருத்திகா சிவகுமார் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.

இந்தியன் பப்ளிக் ஸ்கூல் நிர்வாக இயக்குனர் டாக்டர் சிவகுமார் மற்றும் கிருத்திகா சிவகுமார் அவர்கள் இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை மிகவும் சிறப்பாக செய்திருந்தார்கள்.